தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

சர்வஜன வாக்குரிமையும் தேர்தல்களும்

ஒரு நாட்டிற்குரிய தகைமை பெற்ற சகல பிரஜைக்கும் இனம், மதம், மொழி, சாதி, குலம், கல்வி, சொத்துரிமை, பிறப்பு, பிறப்பிடம், ஆண், பெண் ஆகிய எதுவித பேதங்களும் அற்ற வகையில் நாட்டின் அதிகார நிருவாகத்தில் பங்கேற்கும் உரிமையும், அத்துடன் தங்களுக்கென ஒரு பிரதிநிதியை நியமிப்பதற்கான உரிமையும் கொண்டதுவே சர்வஜன வாக்குரிமையாகும்.

சர்வஜன வாக்குரிமையின் மூலம், மக்கள் இறைமை பாதுகாக்கப்படுவதற்கான அதிகாரம் மக்களுக்கு உரித்தாகின்றது.  மற்றொரு வகையில் கூறுவதானால்,  தனக்காகவும், நாட்டிற்காகவும் தீர்மானத்தை எடுக்கக்கூடிய முக்கிய பொறுப்பு மக்களுடையதாகின்றது. மன்னர் ஆட்சிக் காலத்தில் இவ்வாறான விடயங்கள் தொடர்பாக மன்னர் மாத்திரமே முக்கிய தீர்ப்பாளராக விளங்கினார்.  மன்னர் ஆட்சியை மாற்றியமைத்து ஜனநாயக ஆட்சி முறையின் அடிப்படையில் குடியரசுகள் உருவாகுவதற்கான மூலகாரணமாக அமைந்தது இந்த சர்வஜன வாக்குரிமை முறையாகும்.  மக்கள் அரசாட்சியில் பங்குபற்றும் வாய்ப்புக்கள் இந்த சர்வஜன வாக்குரிமை மூலம் பெறப்பட்டது.

சர்வஜன வாக்குரிமை 1931 ஆம் ஆண்டு கிடைத்தது. டொனமூர் ஆணைக்குழுவின் பிரேரணையின் மூலம் இது கிடைக்கப் பெற்றது.
நவீன உலக நாடுகளில் நிலவுகின்ற நிருவாக முறைகளுள், ஜனநாயக நிருவாக முறையே மிகச் சிறந்ததென பெரும்பாலான நாடுகள் கருதுகின்றன. நாட்டு மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதற்கும். இதன் அடிப்படையில் நாட்டை ஆள்வதற்குத் தகுதியுடையவர்களைத் தேர்ந்தெடுத்து மக்கள் தமது ஆட்சியை அமைப்பதற்கும், தகுதியற்றவர்களை அகற்றி ஆட்சியை மாற்றியமைப்பதற்கும் இந்த சர்வஜன வாக்குரிமை மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. இதன் காரணமாக அரசியல்வாதிகள் மக்களைச் சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டது. ஆட்சி செய்பவர்கள் நாட்டின் பொறுப்பாளர்களாக உள்ளதுடன், நாட்டிற்குரிய அனைத்தினதும் உரிமையாளர்கள் பொதுமக்கள் ஆவார்கள். அரசாங்கங்களுக்கு பொதுமக்களின் கருத்துக்களுக்கும், விருப்பங்களுக்கும் எதிராக செயற்பட முடியாது எனவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் சர்வஜன வாக்குரிமை மூலம் ஆட்சியாளர்களை அகற்றும் அதிகாரமும் பொதுமக்களுக்கு உள்ளது.
1931 ஆம் ஆண்டில் இலங்கை வாழ் சகல பிரஜைகளுக்கும், அதாவது 21 வயதினைப் பூர்த்தி செய்த எதுவித குற்றங்களுக்கும் ஆளாகாதவராக இருக்கும் யாவருக்கும் சர்வஜன வாக்குரிமை கிடைக்கப் பெற்றது. 1959 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தேர்தல்கள் திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம் சர்வஜன வாக்குரிமைக்கு உரித்துடையவர்களாகக் கணிக்கப்படும் வயதெல்லை 21 வயதிலிருந்து 18 வயது வரை குறைக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டின் குடியரசு அரசியல் யாப்பு மற்றும் 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு ஆகியவற்றின் மூலம் சர்வஜன வாக்குரிமையானது, அரசியல் யாப்பின் உறுதிப்படுத்தப்பட்டதொரு அதிகாரமாக உருவாக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் 03 ஆம் அத்தியாயத்தில் "மக்கள் இறைமை" என்பது மக்களின் உடைமை எனவும், அந்த உரிமை வேறெவருக்கும் மாற்றப்படலாகாது எனவும், வேறெவருக்கும் கையளிப்படலாகாது எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் இறைமைக்கு ஆட்சி அதிகாரம், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை என்பனவும் உள்ளடங்குவதாக குறித்த யாப்பில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வாக்குரிமை என்பது மக்கள் இறைமையின் ஒரு பகுதியாகும். அத்துடன் மக்களின் சட்டரீதியான அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தினாலும், மக்கள் தீர்ப்புத் தேர்தலின் மூலம் நேரடியாக மக்களால் செயற்படுத்தப்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பு உட்பட நிறைவேற்று அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அவர்களால் செயற்படுத்தப்படுகின்றது. சட்ட ரீதியான அதிகாரங்கள் யாவும் நீதிமன்றங்களின் ஊடாக பாராளுமன்றத்தினால் செயற்படுத்தப்படுகின்றது. நாட்டின் முழு அதிகாரம், சட்டம் ஆகியவற்றை அமுல்படுத்துதல் போன்ற நிறைவேற்று அதிகாரமும், சட்டங்களும் வாக்குரிமையின் ஊடாக மக்களே செயற்படுத்துகின்றனர் என்பது இவற்றின் மூலம் தௌிவாகின்றது. ஆகவே ஒட்டு மொத்த நிருவாக அதிகாரங்களும் சர்வஜன வாக்குரிமையில் தங்கியுள்ளது என்பதும் தௌிவாகின்றது.
தேர்தல்கள் என்னும் ஊடகம் மூலமாகவே சர்வஜன வாக்குரிமை செயற்படுத்தப்படுகின்றது. எமது நாட்டில் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றிற்கு உறுப்பினர்களைத் தேர்நதெடுப்பதற்கான தேர்தல்கள் ஆகியவையும், அவசியப்படும் பட்சத்தில் மக்கள் தீர்ப்பும் நடாத்தப்பட்டு வருகின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே இந்தத் தேர்தல்களை நடாத்தும் அதிகாரம் உள்ளது. இவ்வாறான தேர்தல்களை நடாத்துவதற்கு உரிய சட்ட ரீதியான தேவைகள் யாவும் அரசாங்கத்தினால் பூர்த்தி செய்யப்படல் வேண்டும். இந்த முறை "பிரதிநிதித்துவ ஜனநாயக முறை" என அழைக்கப்படுகின்றது. இந்த முறையின் மூலம் தேர்தல்கள் நடாத்தப்பட்டு மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களாலே நாட்டின் நிருவாகம் மேற்கொள்ளப்படுகின்றது.
ஒரு வாக்கினது இரகசியத் தன்மையைப் பேணுதல், தனிநபரின் வாக்கு (விருப்பம்) பல வழிகளாலும் மாற்றமடைவதற்கான அல்லது மாற்றப்படுவதற்கான சந்தர்ப்பங்களுக்கு இடமளிக்காதிருத்தல், அரசியற் கட்சிகளின் நடவடிக்கைகள், ஊடக சுதந்திரம், சகலருக்கும் சமமான சந்தர்ப்பங்கள் வழங்குதல், மாற்றங்களுக்கு உட்படாதிருத்தல், சட்டத்தின் ஆதிக்கம், சுயாதீன சட்ட விதிமுறைகள் என்பன சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கு அவசியமாகின்றது.
ஓவ்வொரு தேர்தல்களும் அந்தந்த தேர்தல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறான காலஎல்லைக்குள் நடாத்தப்படல் வேண்டும். இதன் பிரகாரம் குறித்த நாளில் வேட்பு மனுக்கள் கோரப்பட்டு, ஆட்சேபனைகளையும் பரிசீலித்த பின்னர் தேர்தல் நடாத்தப்படும் நாள் வரையான நாட்களைக் கணிப்பீட்டுத் தேர்தலை நடாத்தி தேர்தல் முடிவுகளை வெளிப்படுத்தும் நாள் வரையான காலப்பகுதி தேர்தல் காலம் எனக் கருதப்படுகின்றது. 1947 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த வாக்களிப்பு முறையானது, தேர்தலில் போட்டியிடும் அபேட்சகருக்குரிய கட்சியின் நிறத்திலான வாக்குச் சீட்டுக்களிலே தமது வாக்கினை அளித்து குறித்த அபேட்சகருக்குரிய நிறத்திலான பெட்டியினுள் தமது வாக்குச் சீட்டுக்களை இடும் முறையாகும். 1947 ஆம் ஆண்டில் அரசியற் கட்சிகளுக்கும், சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் சின்னங்கள் வழங்கப்பட்டன. அந்த வகையில் 1947 ஆம் ஆண்டில் 24 சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் கட்சிச் சின்னங்களுக்கே வாக்குகள் அளிக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 19 நாட்கள் தேர்தல் நடாத்தப்பட்டுள்ளதுடன், தற்போது ஒரே நாளில் முழு நாட்டிற்குமான தேர்தல் நடாத்தப்படுகின்றது. 1978 ஆம் ஆண்டு வரை பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தொகுதிவாரி முறையிலான வாக்கெடுப்பு நடைபெற்றது. 1978 ஆம் ஆண்டின் பின்னர் விகிதாசார முறை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாவட்ட ரீதியாக ஒவ்வொரு கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் கிடைக்கப் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மாவட்டத்தின் உறுப்பினர் எண்ணிக்கையின் விகித முறைப்படி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தலே விகிதாசார முறையாகும். வாக்களிப்பதற்காகத் தேருநர் இடாப்பில் பெயர் பதிவதன் அவசியமும் மிக முக்கியமான விடயமாக அமைந்துள்ளது
தேர்தல்களை நடாத்துவதற்கான முழு அதிகாரமும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கே உரியதாகும். 19 ஆவது அரசியல் யாப்பின் திருத்தத்திற்கு முன்னர் தேர்தல் ஆணையாளருக்கே குறிப்பிட்ட அதிகாரம் இருந்து வந்தது. 1959 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் ஆணையாளர் என்பவர், கணக்காய்வாளர் நாயகத்திற்குச் சமமானவராக அரசாங்கத்தின் தலையீடுகள் அற்ற சுயாதீனமான பதவியாக அமைந்திருந்ததுடன், 1964 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு வாக்களிப்பினால் அன்றி தேர்தல் ஆணையாளரை பதவி நீக்கம் செய்ய இயலாது என்னும் நடைமுறையின்படி அப்பதவியின் சுயாதீனத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. 19 ஆவது அரசியல் யாப்பின் மூலம் நிறுவப்பட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அவ்வாறான சுயாதீனத் தன்மையும், அதற்கும் மேலான சுயாதீனத் தன்மையும் வழங்கப்பட்டுள்ளது தேர்தல்களை நடாத்தும் பொறுப்புக்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூறுவதற்கான கடப்பாடு அமைந்துள்ளதுடன், பாராளுமன்றத்தினால் பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறும் கடப்பாடு அமைந்துள்ளது.